தனி வாக்குச்சாவடி கோரும் மலைவாழ் மக்கள்
உடுமலை,டிச. 25 வரும் மக்களவை தேர்தலில் தனி வாக்குச்சாவடி வேண்டும் என்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வரும் மலை வாழ்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரட்டுப்பதி, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்திட்டு, சோலையூத்து, கொட்டையாறு, பூச்சிக் கொட்டாம்பாறை, குருமலை, திருமூர்த்திமலை, மாவடப்பு, குழிப்பட்டி, புளியம்பட்டி, கருமுட்டி என அழைக்கப்படும் ஒவ்வொரு கிராமத்திற்கும் பல மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். மொத்தமுள்ள 18 மலை கிராமங்களிலும் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயம், தைலம் தயாரிப்பது, பட்டுப் பூச்சி வளர்ப்பு, தேன் எடுப்பது, மூலிகை புல்லை காய்ச்சி விற்பனை செய்வது என பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு சோலார் மின்சாரத்தின் மூலம் இயங்கும் ரேடியோ, டி.வி ஆகியவைதான் ஒரே தகவல் தொடர்பு. பல்வேறு அரசு நலத்திட்டங்களை உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் மூலமும், வட்டாட்சியர் அலுவலகம் மூலமும் பெற்று வருகின்றனர். உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களாக இருந்து வரும் இவர்கள் அரசு தங்களுக்கென ஒரு வாக்குச் சாவடியை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து உடுமலை வட்டாட்சியர் பி.செல்வராஜ் கூறியது:
மலைவாழ்மக்கள் பல ஆண்டுளாக இக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மாவடப்பு செட்டில்மெண்டில் ஒரு வாக்குச் சாவடி அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரில் ஆய்வு செய்து ஒரு வரைவு திட்டம் தயாரித்து அனுப்பினோம். ஆனால் காட்டு விலங்குகள் உள்ள பகுதியானதால் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக கொண்டு வர முடியாது என தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. பொதுவாக 1200 வாக்குகளுக்கு மேல் இருந்தால் ஒரு வாக்குச் சாவடி அமைக்க முடியும் என விதி உள்ள நிலையில் அனைத்து செட்டில்மெண்டுகளையும் இணைத்து ஒரு வாக்குச் சாவடி அமைக்கலாம். ஆகையால் மீண்டும் அரசுக்கு ஒரு திட்ட வரைவு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.
ஆனாலும் தேர்தல் ஆணையமும், மாநில அரசும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்