Breaking News
recent

பெருநாள் கொண்டாட்டமும், கொலைவெறி சுடிதாரும்.

புனிதமிக்க ரமழான் மாதம் முடிவுறும் தருவாயில் ஈகைத் திருநாளான நோன்புப் பெருநாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக இஸ்லாமியர்கள் புத்தாடை வாங்கும் படலத்தை நோன்பின் ஆரம்பத்திலேயே துவக்கிவிட்டார்கள். பெருநாளைக்காக புத்தாடை அணிவதை இஸ்லாம் தாராளமாக வரவேற்கின்றது. புத்தாடை அணிய வேண்டும்.

ஆனால் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக ஆடை வாங்குவதாகக் கூறிக் கொண்டு புனிதமிக்க இறுதிப் பத்தின் புனிதமான நேரங்களை வீனடிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

ரமழானின் இறுதிப் பத்தை எடுத்துக் கொண்டால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்பத்துடன் இரவு, பகல் என்று பாராமல் ஆடைக் கடைகளில் நிறம்பி வழிவதைக் காண முடிகின்றது. இறுதிப் பத்தென்றாலே பெருநாள் ஆடை வாங்குவதற்குறிய நாட்கள் தான் என்பதைப் போல் மக்கள் மத்தியில் ஒரு நிலைபாடு உருவாகியிருக்கிறது.

கொலைவெறி சுடிதார் தான் எனக்கு வேண்டும்.

இதே நேரம் இஸ்லாத்தை படித்து அதன்படி குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர் சினிமாவின் நிழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதின் விளைவு, பெருநாள் ஆடையைக் கூட சினிமாக்காரனின் ஆடையாக இருக்க வேண்டும் என்று நம் பிள்ளைகளும், பெற்றோர்களும் விரும்புகின்றார்கள்.

பெருநாள் தினம் நெருங்கிவிட்டாலே சினிமா திரைப்படங்களின் பெயர்களிலும், ஹீரோ, ஹீரோயின்களின் பெயர்களிலும் தான் ஆடைகள் கூட வெளியிடப்படும். காரணம் மக்கள் சினிமா மேல் வைத்துள்ள மோகத்தை வியாபாரமாக்குவதுதான் வியாபாரியின் யுக்தி.

இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள இரு பெருநாட்களிலும் பெருநாள் அல்லாத நாட்களிலும் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தான் நமது ஆடைகள் இருக்க வேண்டுமே தவிர நாம் நினைப்பதைப் போல் மார்க்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இருக்கக் கூடாது.

முழு கையையும் மணிக்கட்டு வரை மரைக்க வேண்டிய பெண்கள் முழுக் கையையும் திறந்து கொண்டு, இறுக்கமாக ஆடை அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளையும் திறந்து கொண்டு திரியக் கூடிய காட்சியை அன்றாடம் காண முடிகின்றது.

திருமறைக் குர்ஆன் நமக்கு சொல்லும் அறிவுரையைப் பாருங்கள்.

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன் : 57 : 20)

மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனம் உலக வாழ்வின் யதார்த்தத்தை மிகத் தெளிவாக விளக்குகின்றது. உலகத்தை மழைக்கு ஒப்பாக்கிக் காட்டுவதின் மூலம் உலக வாழ்வு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி தெளிவாகின்றது.

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன் : 29 : 64)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் : 6 : 32)

பெருநாள் தினத்தை இஸ்லாம் எந்த முறையில் கொண்டாடும் படி பணித்துள்ளதோ அந்த முறையில் மார்க்கத்திற்கு உட்பட்டு கொண்டாடி மகிழ்வோமாக!
நன்றி:jaffnamuslim.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.