அனைவருக்கும் கல்வி இயக்க குறுவள மையக் கூட்டத்தில் மத விழா: பொதுமக்கள் ஆட்சேபணை
ஆம்பூர், டிச. 13: ஆம்பூரில் சனிக்கிழமை நடந்த அனைவருக்கும் கல்வி இயக்க குறுவள மைய ஆசிரியர்களுக்கான கூட்டத்தின்போது, கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியதற்கு பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.
"உணவு இடைவேளையின்போது நடத்தப்பட்ட விழாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்' என பள்ளித் தலைமை ஆசிரியர் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆம்பூர் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமின்போது, கிறிஸ்தவ மதப் பாடல்கள் பாடும் ஒலி அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கேட்டுள்ளது.
பள்ளியின் உள்ளே அவர்கள் சென்று பார்த்தபோது, தோரணங்கள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டு ஒரு பாதிரியார் கிறித்துவ மதப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, "பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா எவ்வாறு நடத்தலாம்' என பொதுமக்கள் ஆட்சேபணை கூறியுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அலங்காரங்களை ஆசிரியர்கள் கலைத்துள்ளனர்.
பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில் பள்ளியை விட்டு எவரும் வெளியேச் செல்லாதவாறு பொதுமக்கள் பள்ளியின் வாயில் கதவினை பூட்டினார்கள்.
தகவலறிந்த போலீஸôர் பள்ளிக்குச் சென்று பூட்டியிருந்த கதவை திறந்து ஆசிரியர்களையும், பொதுமக்களையும் வெளியே அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், ராமச்சந்திரன், காமராஜ், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ஏகானந்தம், வருவாய் ஆய்வாளர் பாபு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து குறுவள மைய ஒருங்கிணைப்பாளரும், ஆம்பூர் பன்னீர்ச்செல்வம் நகர் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியருமான சா.பிச்சை கூறியது:
உணவு இடைவேளையின்போது இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும், பாதிரியாரை வைத்து கொண்டாடியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்றார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
AdiraiPost
ஆட்சேபணை
கல்வி
பொதுமக்கள்
மத விழா
அனைவருக்கும் கல்வி இயக்க குறுவள மையக் கூட்டத்தில் மத விழா: பொதுமக்கள் ஆட்சேபணை
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்