சென்னை அமெரிக்க தூதரகம் மீது செருப்பு வீச்சு
மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியவர் கைது
சென்னை, டிச.22-
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மீது செருப்பு வீசியவர் கைது செய்யப்பட்டார்.
பலத்த பாதுகாப்பு
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் எந்திர துப்பாக்கியோடு போலீசார் காவல் காக்கிறார்கள். சந்தேகத்துக்கிடமான நபர்கள் அந்த வழியாக யார் சென்றாலும் போலீசார் அவர்களை பிடித்து சென்று விடுகிறார்கள்.
கடந்த வாரம் மன நோயாளி கூர்க்கா ஒருவர் அங்கு முறைத்து பார்த்தபடி நின்றதால், அவரை பிடித்து விசாரித்து விட்டு பின்னர் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து, தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர்.
செருப்பு வீச்சு
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்க தூதரகம் அருகே கதீட்ரல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செருப்புகளை கழற்றி அமெரிக்க தூதரக அலுவகம் மீது வீசி விட்டு தப்பி ஓடினார்.
அவரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். போதையில் இருந்த அவரை விசாரித்த போது அவரது பெயர் அப்துல்ரகுமான் என்றும், புரசைவாக்கம் தானா தெருவைச் சேர்ந்த அவர் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்வதும் தெரிய வந்தது. போதையில் செருப்பை வீசி விட்டதாக அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் பாதுகாப்புக்குட்பட்ட பகுதியில் செருப்பு வீசியதால், அவர் கைது செய்யப்பட்டார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்