Breaking News
recent

தேசியப் புலனாய்வு அமைப்பு செயல்படத் தொடங்கியது

தேசியப் புலனாய்வு அமைப்பு செயல்படத் தொடங்கியது

புது தில்லி, டிச. 31: பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அமைப்பான தேசியப் புலனாய்வு அமைப்பு இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.


இதற்கு ஓரிரு தினங்களில் தலைமை இயக்குநர் நியமிக்கப்படுவார். தேசியப் புலனாய்வு அமைப்பு அமைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்தார்.


முன்னதாக, தேசியப் புலனாய்வு அமைப்பை நிறுவ வகை செய்யும் தேசியப் புலனாய்வு அமைப்பு மசோதா, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார். இதையடுத்து இரண்டும் சட்டமாகி விட்டன.


மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.


இது தொடர்பாக நிருபர்களிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பயங்கரவாத குற்றச்செயல்களை விசாரிப்பதற்காக தேசியப் புலனாய்வு அமைப்பு நிறுவப்படும். பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கு அதனிடம் ஒப்படைக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணையை அந்த அமைப்பு தொடங்கும்.


அதனிடம் ஒப்படைக்கவேண்டிய வழக்குகளை முடிவுசெய்யும் பொறுப்பு இரு நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் தரப்படும். ஏழு வேலை நாள்களுக்குள் வழக்கின் தன்மையை விசாரித்து தேசியப் புலனாய்வு அமைப்பு மூலம் விசாரிக்கவேண்டிய வழக்கா? இல்லையா? என்பதை இந்த குழு முடிவு செய்யும்.


பயங்கரவாத தடுப்புப்பயிற்சி பள்ளிகள்: கலவரம், பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கில் போலீஸôருக்கு பயிற்சி அளிக்கும் 20 பள்ளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள போலீஸôருக்கு இவை பயிற்சி அளிக்கும்.


பயங்கரவாதம் தொடர்பான உளவுத் தகவல்களை வாரம் ஏழு நாளும் என இரவு பகலாக தொடர்ந்து சேகரிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் உதவும் சிறப்பு மையம் (பன்முகமை மையம்) புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கிவிட்டது.


இந்த மையம் மாநில அரசுகள், யூனியன் பிரதேச உளவு அமைப்புகளுடன் பயங்கரவாதம் தொடர்பான உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.


நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் தேசிய அதிரடிப்படை கிளை முகாம்களை அமைப்பது தொடர்பான குறிப்பை அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு உள்துறை அமைச்சகம் விரைவில் தாக்கல் செய்யும். இத்தகைய மையங்கள் இதர நகரங்களிலும் அமைக்கப்படும்.


துணை நிலை ராணுவப்படை வீரர்களுக்கு குண்டு துளைக்காக 20000 ஜாக்கெட்டுகள் உடனடியாக வாங்க நடவடிக்கை தொடங்கிவிட்டது.


மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஒத்துழைப்பதற்கு பதிலாக எதைச் சொன்னாலும் அதை மறுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது பாகிஸ்தான்.


மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கஸபின் தந்தை தொலைக்காட்சியில் தோன்றி கஸப் தனது மகன்தான் என்றார். சட்ட உதவி கேட்டு பாகிஸ்தானுக்கு கஸப் கடிதம் எழுதினார்.


இவ்வளவும் இருக்கும்போது மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதை நிரூபணமாக்க பாகிஸ்தானுக்கு வேறென்ன ஆதாரம் தேவை என்றார் சிதம்பரம்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.