Breaking News
recent

சுமைதாங்கி


பெண்கள் எதிலும் சளைத்தவர் கள் இல்லை என்பதற்கு இலக்கணமாக, பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அதேசமயம், பெற்றோர், கணவரால் கைவிடப் பட்ட இளம்பெண்கள் சிலர் வாழ்கையில் பிடிமானம் இல்லா மல் விபரீத முடிவுகளை மேற் கொள்கின்றனர். இன்னும் சிலர், தவறான வழிக்கு சென்று வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். அப்படிப் பட்ட சூழ்நிலையில் சிக்கித் தவித்து, மீண்ட இளம்பெண் ஜெரீனாபேகம் தற்போது லோடு வேன் ஓட்டி குடும்பத்தை கவுரமாக நடத்தி வருகிறார்.

சென்னை, கொருக்குப்பேட்டை, பென்சில் பேக்டரியைச் சேர்ந்தவர் ஜெரீனாபேகம். சிறு வயதில் காதல் வயப் பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். பின் கணவரால் கைவிடப்பட்டு, மூன்று குழந்தைகளுடன் நடு வீதிக்கு தள்ளப்பட்டார். தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தற்போது வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்.
தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஜெரீனாபேகம்: நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக, ஐந்தாவதோடு படிப்பை நிறுத்திக் கொண்டேன். டீன் ஏஜில் ஏற்படும் காதல் நோய் என்னுடைய 13வது வயதில் தொற்றிக் கொண்டது. காதல் வயப்பட்டேன். வீட்டை விட்டு வெளியேறி காதலனை கைப்பிடித் தேன். ஆயிஷாபானு, தாஜுநிஷா என இரண்டு மகள்களும், முகமதுசலீம்(8) என்ற மகனும் பிறந்தனர். சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய எனது கணவர் திடீரென பிரிந்து சென்றுவிட்டார். மூன்று குழந்தைகளுடன் நடுத் தெருவில் நின்றேன். காதல், கலப்பு திருமணம் என்பதால் பெற்றோர் எங்களை ஏற்கவில்லை. போக்கிடம் இல்லாமல் தவித் தேன். மூன்று பிள்ளைகளின் தினசரி உணவிற்கு பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டேன்.
"இனி பிச்சை எடுக்காமல் கவுரமாக வாழவேண்டும்' என முடிவு செய்தேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தற்கொலை என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஏற்படவில்லை. அவற்றை ஒதுக்கி, வீட்டு வேலைக்கு சென்றேன். சில நல்ல மனிதர்கள் உதவியுடன் கார் ஓட்ட பழகிக் கொண் டேன். முறையாக "லைசென்ஸ்' பெற்று ஒரு வீட்டில் கார் டிரைவராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாடகைக்கு லோடு வேன் ஓட்டி வருகிறேன். நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். காலை எட்டு மணி முதல் இரவு 9 மணிவரை வேன் ஓட்டுவேன். பஞ்சரானால் "ஸ்டெப்னி' மாற்றுவது உள்ளிட்ட சிறு சிறு மெக்கானிக் வேலையும் கற்று வைத்துள்ளேன்.
லோடு ஏற்றிச் செல்லும்போது, வேன் "பிரேக் டவுன்' ஆனாலும் சமாளித்து விடுவேன். நான் சம்பாதிப்பது, குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இருப்பினும், என்னுடைய லட்சியம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும்; சொந்தமாக ஒரு வேன் வாங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான். இவ்வாறு தன்னம்பிக்கையுடன் ஜெரீனாபேகம் தெரிவித்தார். இவரது மூத்த மகள் ஆயிஷாபானு ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். தாஜுநிஷா கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டாள். தனது வேலையுடன் இன்றுவரை அவரை தேடிவருகிறார். இளம் வயதில் சறுக்கியதால் வாழ்க்கையே இழந்தது விட்டதாக கருதும் இளம்பெண்களுக்கு ஜெரீனாபேகம் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.
நன்றி:தினமலர்.
(இந்த சகோதரி விரும்பும் பட்சத்தில் அவருக்கு மறுவாழ்வு கொடுக்க சகோதரர்கள் முன் வரவேண்டும்.சமூதாய அமைப்புகள் மார்க நெறிமுறைகளை போதித்து இந்த அபலையின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாமே?அந்த பெண்னுக்கு வேண்டிய உதவிகளை மேற்கொள்ளலாமே?சிந்திப்போமாக,செயல்படுவோமாக)
crown.
crown

crown

1 கருத்து:

  1. ஆரிபு,முத்துப்பேட்டை4 ஜனவரி, 2010 அன்று 1:12 AM

    சரியாண நேரத்தில் வெளியிடப்பட்ட செய்தியும் உங்களின் யோசனையும்.இதுபோல் நம் சமுதாயத்துக்கு எத்தனையோ சோதனைகள் இடர்பாடுகள்.சகோதரிகளுக்குஇது ஒரு எடுத்துக்காட்டு,இளவயதில் உடல்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு பின் கைவிடப்படும் அபலைகள் பல ஆயிரம் இனிமேலாவது நம் சகோதரிகள் முழு எச்சரிக்கையாக இருக்கனும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.