Breaking News
recent

ஊடகங்களில் மதத்திணிப்பா ...?

இன்று சக்தி TV இல் Grand Master நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தபோது "வணக்கம்" ஊடகங்களில் ஒரு மதத்திணிப்பின் கருவியாக இருக்கிறதா என்றொரு சந்தேகம் வந்தது.

முஸ்லிம் மாணவி ஒருவருக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துபவரும் "வணக்கம்" என்றே வரவேற்றனர். (இங்கு வரவேற்றனர் என்ற வார்த்தை பிரயோகம் சரியானதாக தெரியவில்லை.)

முதல் சந்தேகம்
வணக்கம் என்பதால் கருதப்படுவது என்ன? எனக்கு தெரிந்த தமிழின் படி வணக்கம் என்றால் வணங்குதல் என்றல்லவா பொருள்படும்? அப்படி பொருள்படுமாயின் "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே" என்ற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையோடு அது முரண்படுகிறது. அதேவேளை அறிவிப்பாளர் நேயரின் மதம்தொடர்பான வரவேற்பு முறையத்தான் கையாளவேண்டும் என்பது என் வாதமல்ல. அதுவும் அறிவிப்பாளர் மீதான மத திணிப்பா என்ற கேள்வியெழுகிறது.

இரண்டாவது சந்தேகம்
இது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா? அப்படியாயின் அறிவிப்பாளர் எம்மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அவரது மத வழக்கப்படி உள்ள சொல்லை பிரயோகிக்கப்படவேண்டும். சகிப்புத்தன்மை, நல்லுறவு போன்றன இரு பக்கமும் இருக்கவேண்டுமல்லவா? ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அது திணிப்பாகவே அமையுமல்லவா? ஆனால் தமிழ் ஊடகங்களில் மத நிகழ்ச்சிகள் அல்லாத மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட அனுமதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

மூன்றாவது சந்தேகம்
மதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா? ஏன் அவ்வாறான ஒரு ஆன சொல்லை எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது?

குறிப்பு: சந்தேகங்களைத்தான் கேட்கிறேன். எனவே சந்தேகங்களை தீர்க்க நாகரிகமான சொற்பிரயோகங்களையே பிரயோகிக்கவும். 
நன்றி:என்ன கொடும சார்


 நல்ல கேள்வி இது, நம்மர்கள் கூட சில நேரங்களில் குழப்பம் அடைகிறார்கள்; சிலருக்கு இதன் கொள்கை பாதிப்பு தெரிவதில்லை என்பதே உண்மை!

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....
மார்கமும் தமிழ் மொழியின் சொற்பிரயோகம் நன்கறிந்தவர்கள் நித்தமும் ஏற்படும் இந்த குழப்பதை நீக்க முன்வரவேண்டும்!                      





Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. குறிப்பிடப்பட்ட முதலாவது சந்தேகம் அடிப்படையில் தவறானது அன்பரே...
    எந்த ஒரு நபரையும் (பெரியவராக இருப்பினும் சிறியவராக இருப்பினும்) வணக்கம் என்று கூறி வரவேற்பது தமிழ் மரபு... வணக்கம் என்பது வெறுமனே இறைவணக்கம் என்ற கருத்தில்/அர்த்தத்தில் மட்டும் கருதுவது தவறானது.. சிங்களத்தில் ஆயுபோவனுக்கு ஒத்தது.. ஆங்கிலத்தில் greeting செய்வதற்கு இடம், காலம், பொருள் என்பதை பொறுத்து Good morning, Good Afternoon, Good Evening, Welcome, hi, etc.. போன்ற பல வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன.. ஆனால் வணக்கம் என்ற சொல் தமிழில் இடம், காலம், பொருள் என்பதைத் தாண்டி வரவேற்று உபசரிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்படிகிறது.. ஆனால் தனியே வரவேற்க மட்டும் பயன்படும் சொல் அல்ல... இறைவணக்கத்தையும் குறிக்கலாம்.. ஆயினும் இறைவனை வணங்குதல் என்பதுடன் 'வணக்கம்' என்ற வரவேற்பு அர்த்தத்தை உடைய சொல்லுடன் போட்டு குழப்பி கொள்ள கூடாது....

    ஒரு சொல் பேசப்படும் காலம், சூழல், பொருள், தொனி என்பவற்றை பொறுத்து அர்த்தம் வேறுபடும்...
    தமிழில் பல சொற்கள் இவ்வாறு தான் என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டியதில்லை...
    உதாரணமாக "பார்த்து படி" என்பது படிக்கும் ஒருவரை பார்த்து கவனமாக படிக்கவும் என்ற தொனியிலும் சொல்லலாம்... அதே வார்த்தைகள் படி ஏறும் போது தடுக்கிய ஒருவரை பார்த்தும் கூறலாம்... ஓரே வார்த்தைகள் இரு வேறு இடங்களில் இரு முழுமையான வேறுபட்ட அர்த்தங்களை தருகிறது...

    இது மொழியின் இலக்கணம் அழகியல் சார்ந்த விடயமே தவிர, மதத்தை போட்டு குழப்பி கொள்ள வேண்டிய அவசியமில்லை...
    ஆகவே முதல் சந்தேகமே அடிப்படையில் மாறானது என்பதால் இரண்டாவது சந்கேத்துக்குரிய தேவை இல்லை என நினைக்கிறேன்...

    மூன்றாவது சந்தேகம்: தமிழில் "வணக்கம்" என்பதே மிகச்சிறந்த மதங்களை தாண்டிய வரவேற்பு சொல்லாகும்...

    பதிலளிநீக்கு
  2. ஆகா மறுபடி ஆரம்பிச்சுட்டாருய்யா..
    வணக்கம் ஒரு பொது சொல்.. அது இந்து மதத்தை சார்ந்தது அல்ல..
    யாராவது துறைபோன பேராசிரியர்களை அழைத்துக் கேளுங்கள்..

    அன்புள்ள என்ன கொடும சார்.. இப்பொழுது மிகத் தெளிவாகவே புரிகிறது என் நீங்களை உங்கள் பெயரில் வெளிப்படுத்தாமல் புனை பெயரில் மறைந்து வாழ்கிறீர்கள் என்று..

    எல்லாவற்றையும் மதக்கண்ணாடி கொண்டு பார்க்காதீர்கள்..

    இதையும் சண்டைக்கான ஆயத்தம் என்று சொல்லாதீர்கள்..
    உங்கள் அனைத்துப் பதிவுகளிலும் ஒரு வித பிரிந்து போதல் மற்றும் துவேஷம் காண்கிறேன்..

    நான் சமயம் சார்ந்தவன் அல்லன் என்பதால் வணக்கம் குறித்து தெளிவாகவே சொல்கிறேன்...
    வணங்குதல்,வழிபடுதல்,வணக்கம் எல்லாவற்றிற்கும் தனித்தனியான வேறுபாடுகள் உள்ளன.

    என்ன கொடும சாருக்கு இட்ட பதில்..

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.