Breaking News
recent

தமிழக முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய இலங்கை அரசியல்!


(முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்)
அண்மைக் காலமாக ஊடகங்களில் அமைச்சர் றிசாட் பதியுதீனை அவமதிக்கும் வகையிலான செய்திகளை ஆயரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ, செல்வம் போன்றோரும் வெளியிட்டு வருகின்றனர். இச்செய்திகளை அமைச்சருக்கு எதிரான செய்தியாக நாம் பார்க்கவில்லை. புலிகளால் இனச்சுத்திகரிப்பின் மூலம் வெளியேற்றப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த ஒரு இலட்சம் மக்களுக்கும் எதிரான கருத்தாகவே நாம் பார்க்கிறோம்.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இனிமேல் ஒருபோதும் மீளத்திரும்பமாட்டார்கள் என்றே சிலர் நினைத்திருந்தனர். அவர்களை விட்டுவிட்டு தாம் நினைத்த விதமாக அரச காணிகளை ஆலயங்களுக்கும் கோயில்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளித்ததை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். கொக்குப்படையான், சவேரியார் புரம் போன்ற இடங்களில் திட்டமிட்ட குடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளதை நியாயமாகச் சிந்திக்கும் அப்பகுதி தமிழ்மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

எம்.பி.க்களான செல்வமும், வினோவும் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் றிசாட் அமைச்சரானார் என அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளனர். முஸ்லிம் ஒருவருக்கு வாக்களிக்கும் மனோநிலை தமிழர்களிடம் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. 100% முஸ்லிம்களின் வாக்குகளாலேயே றிசாட் அமைச்சரானார். இது தெரியாமல் பொறாமையால் கண்டபடி அறிக்கை விடுவது சிறு பிள்ளைத்தனமானது.


தமிழ் கூட்டமைப்புக்குள் இருக்கும் விஷப் பாம்புகளாகவே இவர்களை நாம் பார்க்கிறோம். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களினை 22 வருடங்களுக்குள் என்றாவது ஒருநாள் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பார்க்க வந்துள்ளனரா? எம்மால் வஞ்சிக்கப்பட்ட சமூகம் என்று பிராயச்சித்தமாக ஏதாவது உதவி செய்துள்ளனரா? புறாவுக்கு சதையையும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் கொடுத்தது எம் சமூகமே என புராணம் படிப்பதிலும் இராமன், மனுநீதிச் சோழன் பற்றிப் புகழ்பாடுவதிலும் என்ன நியாயம் இருக்கிறது.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்பு அனைத்து வளங்களையும் பல்கலைக்கழக கோட்டாக்களையும் அரச தொழில்களையும் நிவாரணங்களையும் அரச காணிகளையும் பெற்று சுகமாக வாழ்ந்தோர் நீங்கள்தானே. வன்னி யுத்தத்தில் வாழ்விழந்து வவுனியா முகாம்களில் வதைபட்ட உங்கள் இனத்திற்கு எம் அமைச்சர் புனர்வாழ்வு அமைச்சு மூலம் செய்த அத்தனை உதவிகளையும் அடியோடே மறந்துவிட்டீர்களே.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’. எம் இன அமைச்சர்கள்கூட எம்மக்களின் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடந்துள்ளனர். உதாரணமாக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப்கூட ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு வழங்கியபோது எம்மின மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்பு வழங்கினார். இப்படியான பின்னணியில்தான் அல்லாஹ் அமைச்சர் றிசாட் அவர்களை எம்சமூகத்திற்கு அருட்கொடையாகத் தந்துள்ளான்.


22 வருடங்களாக நாம் இழந்தவைகளை அவர் மூலமாக பெறும்போது துவேசப் பேச்சுக்களும் அறிக்கைகளும் வெளிவருகின்றன. காணிகள், வீடுகள், அரச பதவிகள், நிவாரணங்கள் ஏனைய உதவிகளை அமைச்சர் செய்யும்போது நீங்கள் ஏன் துள்ளிக் குதிக்கிறீர்கள். இப்படியான நிலையில் காணியும் பொலிஸ் அதிகாரமும் உங்கள் கையில் கிடைத்து விட்டால் அரை மணிநேரத்தில் முஸ்லிம்களை வெளியேற்றி விடுவீர்கள் போலிருக்கிறது.

தம்புள்ள பள்ளி உடைப்புக்கு எதிராக குரல் எழுப்பிவிட்டால் மட்டும் நீங்கள் புனிதராக முடியாது. உங்களால் உடைக்கப்பட்ட (சமூகத்தால்) எம்பள்ளிகளின் படங்கள் இங்கே உள்ளன. அவற்றிற்கு முதலில் விடை சொல்லுங்கள். அரச காணிகளை யாரும் பிடித்தால் அதனை காணி அமைச்சு, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பொலிஸார், நீதிமன்றம் போன்றோர் பார்த்துக் கொள்வர். இதற்குள் ஏன் மதிப்புக்குரிய ஆயரவர்கள் தலையிட வேண்டும். அரச நிர்வாக இயந்திரம் அதனைப் பார்த்துக்கொள்ளும்.


மன்னார் ஆயரிடம் சில கேள்விகள்
* ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலா சாபம் விடுகிறீர்கள்? (ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி)
* புனித சவேரியாரின் வருகைக்கு முன்பே எம் அரேபியர்களின் வருகை மன்னாரிலிருந்தது என்பதை அறிவீர்களா?
* எம்மக்கள் வெளியேற்றப்பட்டபோது அது பிழையெனக்கூறி ஏன் நீங்கள் தடுக்க முன்வரவில்லை?
* எமது இறை இல்லங்கள் உடைக்கப்பட்டதை நீங்கள் ஏன் தடுக்கவில்லை?
* முசலிப் பிரதேச வீடுகள் யாவும் உடைக்கப்பட்டு கதவு, நிலை, மரங்கள், ஓடுகள், கற்கள் என்பன வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு விற்கப்பட்டதையும் மாவீரர் குடும்பங்களுக்காக மடுப்பிரதேசத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதையும் அறிவீர்களா?
* எம் பிரதேச மக்களின் ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் என்ன நடந்தது? யார் உடமையாக்கிக் கொண்டனர்.
* நீங்கள் வைத்துள்ள சர்வமத அமைப்பு என்பது வெறும் லேபலா?

யார் என்ன சொன்னாலும் உங்களின் பைபிளின் பழைய ஏற்பாட்டிற்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கும் தொடர்பை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் ஆமென் என்கிறீர்கள். நாம் ஆமீன் என்கிறோம். முதல் மனிதனை நாம் ஆதம் எனக்கூற, நீங்கள் ஆதாம் என்கிறீர்கள். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இறைவனின் தண்டனைக்கு பயந்து ஒன்றுபடுவோமாக.
நன்றி: துருவம்  
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.