Breaking News
recent

இன்று வேலூர் சிப்பாய் புரட்சி நாள்! 1857 மே 10


இன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806-ம் ஆண்டில் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.
 
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், முதன்முதலாக கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்திய சிப்பாய்கள் மீரட் நகரில் 1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணிக்கின்றனர். உண்மையில், அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் வேலூர் சிப்பாய் கலகம் என்பதை வரலாறு தன்னகத்தே பதிவு செய்து வைத்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து இதுதான் என்பதையும், இதை வேலூர் சிப்பாய் புரட்சி என்றுதான் வர்ணிக்க வேண்டும் என்பதையும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர்.
 புரட்சி வெடித்தது: 1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால், இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
 
அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இன்னும் கோபத்தை இந்திய துருப்புகளுக்கு ஏற்படுத்தின.
 வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன. இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.
 இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது. கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும்.
 
உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் திறக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும், அன்றைய முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை 10-ம் தேதி அரசு சார்பில் இந்த நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
நன்றி:தினமணி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.