Breaking News
recent

கபுரை இடிக்க வேண்டுமா? முதலில் குஃப்ரை இடியுங்கள்!!

கபுரை இடிக்க வேண்டுமா? முதலில் குஃப்ரை இடியுங்கள்!!
கடந்த சில வாரங்களாக கடற்கரைத் தெருவில் புதிதாக எழுந்தருளியிருக்கும் ஜொஹரா அம்மாள் என்கிற அவுலியா அவர்களின் கைக்கூலி தராமல் வந்திருக்கும் மருமகளுடைய கபுரைப் பற்றி நமதூரைச் சேர்ந்த பல வலைதள ஊடகங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

ஒரு மருமகளுக்கு இப்படி ஒரு மரியாதை செய்யப்படுகிறது என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். கண்ணீர் சிந்திக் கொண்டு கனவில் வரும் மருமகள்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி கபுர் கட்டச்சொன்ன மருமகளைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இப்படி ஒரு மருமகளே கபுர் கட்டச் சொல்லி வந்தால் “அவளுக்கே கபுர், எனக்கு இல்லையா?” என்று நாளை ஒரு மாமியார் வந்தால் நாம் ஆச்சரியப் படத்தேவை இல்லை.

ஜொஹரா அம்மாள் கபூர் பற்றி அதிரைநிருபர் வலைதளத்தில் ஒரு விவாதக் களமும் வைத்தோம். அந்த விவாதக்களத்தில் பலரும் பங்கெடுத்து கருத்துக்களை சொன்னார்கள். அவை தொடர்பாக மேலும் கருத்துக்களை சொல்ல வேண்டி இருப்பதாலும்-கருத்துக்களின் சாரம் மற்றும் முக்கிய அம்சங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கிலும் ஏடு இட்டோர் இயல் தெளிவாக அலசுகிறது..

இந்தப் பிரச்னை பற்றி கடற்கரைத் தெருவைச் சேர்ந்த சில நண்பர்களிடம் பேசினோம். பலரும் இந்த அடக்கஸ்தலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் இதைத் தடுக்க அல்லது நேரடியாக ஈடுபட்டு இடிக்கவோ இடிக்கும் ஆட்களைத் திரட்டவோ முன் வரத் தயங்குகிறார்கள்.

இந்த கபுரை கட்டிய முயற்சிக்கு தலைமை தாங்கியவர் ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பவராம். இன்றுள்ள அரசியல்வாதிகளின் ஆயுதம் பொய்வழக்குப் போடுவது- போலீசை கையில் வைத்து மிரட்டுவது- அடுத்தவர் பிரச்னையில் அனாவசியமாக மூக்கை நுழைத்து பேனைப் பெருமாளாக்குவது ஆகியவைகளாகும். பல தீராத பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம். இந்தப் பிரச்னைகள் தீர்ந்துவிட்டால் இவர்கள் தீர்ந்து விடுவார்கள்.

உள்ளூரில் உள்ள சில்லுண்டி அரசியல்வாதிகளை நாம் கவனித்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி அரசியல் வாதிகளாயிருந்தாலும் ஒரு சிண்டிகேட்டாக செயல்பட்டு நில மோசடி ரியல் எஸ்டேட்- புறம்போக்கு வளைப்பு- கோயில் நிலம் கொள்ளை- உட்பட ஜாமீன் எடுப்பது வரை கூட்டாக செயல்பட்டு இளித்த வாயர்களிடம் புடுங்கியதை தோசையம்மா தோசை! அம்மா சுட்ட தோசை! அப்பாவுக்கு நாலு! அண்ணனுக்கு மூணு! அக்காவுக்கு இரண்டு! எனக்கு ஒன்னு! என்று ஆளாளுக்கு பிரித்துக் கொள்வதும் ஆகும். நமதூர் காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள தேநீர்க் கடைகளில் இவர்கள் அனைவரும் உஜாலா நீலம் போட்ட சட்டை போட்டு ஒன்றாக அமர்ந்து அல்லது திரிந்து மாமன் மச்சான் முறை வைத்து குசுகுசுவென்று பேசிகொண்டிருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியல்வாதிகளில் பல பேர் அரசு ஊழியர்களின் பாக்கெட்டை நிரப்பும் லஞ்ச வணிகத்துக்கு மார்கெட்டிங் மேனேஜர்களாகவே செயல் படுகிறார்கள். வாங்குவதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இவர்களுக்குத் தரப்படும்.

கடற்கரைத் தெருவில் உள்ள பல இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் வந்துள்ளவர்கள் . அல்லாஹ்வுக்கு பயப்படுவதற்கு அடுத்து அவர்கள் கம்பெனி நிர்வாகத்துக்கும் பாஸ்போர்ட்டில் உள்ள விசாவுக்கும் கையில் உள்ள ரிடர்ன் டிக்கெட்டுக்கும் பயப்படுகிறார்கள். ஏதாவது ஒரு விவகாரம் என்று மாட்டிவிடப்பட்டால் பிறகு பயணம் போக முடியாவிட்டால் என்ன செய்வது என்கிற நியாயமான கவலை அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் குறிப்பாக மாமியார் வீடுகளிலும் தென்படுகிறது.

முன்பெல்லாம் உள்ளூரில் இருந்து பிழைத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்த துணிச்சல் பரவலாக வெளிநாடுகள் செல்ல ஆரம்பித்த பிறகு குறைந்து போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். சொத்து வாங்க- அக்கா தங்கை திருமணம்- வாப்பா உம்மா வைத்திய செலவு- மனைவியின் கவர்னர் மாலைக் கனவு என்று பல வகைகளில் “கமிட்” ஆகிவிடுகிறார்கள். அதனால் பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்துவிட்டது. அது மட்டுமல்ல நமது இப்போதைய நிலைக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்கிற மனப்பான்மையும்தான்.

கிட்டத்தட்ட இத்தகைய WALK BY மனப்பான்மை லெபனான், இஸ்ரேல், காசா, ஈராக், எகிப்து, லிபியா, ஆப்கான் பிரச்னைகளில் ஏனைய அரபு நாடுகள் காட்டும் மனப் பான்மையை ஒத்தே இருக்கிறது.

சின்ன வயதில் இஸ்ரேலுக்கும் சிரியா மற்றும் எகிப்துக்கும் போர் நடந்தது. சின்னஞ்சிறு இஸ்ரேல் சிரியாவில் சில பகுதிகளையும் எகிப்தின் சில பகுதிகளையும் வென்று ஆக்ரமிப்பு செய்துவிட்டது. இதை செய்திப் பத்திரிகைகளின் வாயிலாகப் படித்த நமதூரின் சிறந்த அரசியல் கமேன்ட்ஸ்களுக்குப் பெயர் போன ஒரு பெரிய மனிதர் (மர்ஹூம்) ஒருவர் ஒரு கமெண்ட் அடித்தார் . அந்த கமெண்ட் இன்னும் நினைவில் உள்ளது. அவர் சொன்னது “எல்லா அரபு நாடுகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் ஒண்ணுக்குப் போனால் கூட இஸ்ரேல் மிதந்துவிடும் இவனுங்க ஒண்ணுமே செய்யாமல் வேடிக்கை பாக்குனாருங்களே” என்றார்.

அதன் பிறகு அரபு உலகில் நடை பெற்ற எத்தனையோ அத்து மீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் ஆகியவற்றை அரபு நாடுகள் வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள கிடங்குகளையும் போர் விமானக்களையும், போர்க் கப்பல்களையும் நிறுத்திக்கொள்ள வசதிகளையும் செய்து கொடுத்தன. இவற்றிற்கெல்லாம் காரணம் அரபுகள், தான் சாப்பிடும் கஜூருக்கும், குடிக்கும் காஹ்வாவுக்கும் எவ்வித இடையூறும் வந்துவிடக்கூடாது என்று பயந்துதான். இதே எண்ணம்தான் இன்று பல இளைஞர்களின் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த எண்ணங்களையும் மீறி பல இயக்கங்களில் துடிப்பாக ஈடுபட்டு வேலை செய்யும் சிலர் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பெரும்பான்மையினோரின் உள் நோக்கம் அரசியலில் அறியப்பட்டு பின்னாளில் பணம் பண்ண வேண்டுமென்பதே. இத்தகையோரில் பலர், கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு இப்போதே பணம் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில விதி விலக்குகள் இருக்கின்றன என்பதையும் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறோம்.

மற்றோர் முக்கிய பிரச்னையையும் சொல்லியாக வேண்டும்.

நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் ஒரு அப்பாவி சிறுவன் கொல்லப்பட்டான். அது தொடர்பான வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. அநியாயமாக வழக்கில் தொடர்பே இல்லாத பலர் இந்த வழக்கில் பலி கடாவாக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலருடைய தொழில்கள் நசிந்துவிட்டன. சிலருடைய பாஸ்போர்ட்டுகள் இன்றுவரை முடக்கப்பட்டு இருக்கின்றன. அவர்களின் குடும்பங்கள் அல்லல் படுகின்றன. இந்த வழக்கில் பாதிக்கப் பட்டோருக்கு இவ்வளவு பெரிய ஊர் ஜமாஅத் செய்த உதவிகள் என்ன? இந்த வழக்கில் அவரவர்கள் சொந்தமாக ஆஜர் ஆகிறார்கள். அவர்களால் எவ்விதத் தொழிலும் செய்ய முடியவில்லை; எந்த ஊருக்கும் செல்ல முடியவில்லை. இந்த வழக்கில் அநியாயமாக சேர்க்கப்பட்ட ஒரே ஒரு முக்கியஸ்தர் மட்டும் பல பெரிய மனிதர்களின் முயற்சியால் விடுவிக்கப் பட்டார். மற்றவர்கள் நிலை? வழக்கு செலவுக்கு மற்றும் போக்குவரத்துக்கு கூட அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் ஊர் மொத்தமும் அவர்கள் பிரச்னையை அவர்கள் பார்க்கட்டுமென்று ஒதுங்கிவிட்டது.

அடுத்து இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். ஊரில் சில இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று அரசு இயந்திரங்களால் முத்திரை குத்தப் பட்டுப் பழி வாங்கப் பட்டு இருக்கிறார்கள். இவை உண்மையா பொய்யா என்று இந்த ஊரின் திரண்ட மக்கள் தொகை உள்ள ஜமாஅத் ஆராய்ந்து இருக்கிறதா? ஊரைச் சேர்ந்த ஒருவர் ஒரு குறிப்பிட்டக் காரணம் சொல்லப் பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அவர் அப்படி செய்து இருந்தால் அதற்குரிய நியாமான தண்டனையை அவர் ஏற்றே ஆகவேண்டும். ஆனால் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஏதோ காரணங்களுக்காக பழி வாங்கப் படுகிறார் என்றால் அந்தக் களங்கத்தைப் போக்க ஊர் ஒன்று கூடி செய்தது என்ன? ஒன்று ஊர் மூலமாக ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அப்படி தேசத்துரோகத்தில் அந்த இளைஞர் ஈடுபட்டிருந்தது உண்மை என்றால் அரசுத்தரப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ஊர் பெயரைக் கெடுத்தவனுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர அரசுடன் ஒத்துழைத்திருக்க வேண்டும். இரண்டு இப்படி ஒரு அப்பாவியை தேசத்துரோகக் குற்றம் சாட்டி ஜாமீனில் கூட வெளிவர முடியாமல் செய்திருக்கும் அரசை சட்டம் மற்றும் நீதி மன்றங்களின் மூலமாக ஊர் ஒன்று கூடி அந்த இளைஞனை வெளியே கொண்டு வந்து அந்தக் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்து இருக்க வேண்டும். இவற்றில் எதையுமே நாம் செய்யவில்லை.

அடுத்ததாக நமது ஊரைச் சேர்ந்த ஒரு தெருவில் நம்மில் இரு பிரிவினர் திரும்பத் திரும்ப சொந்தப் பகைகள் அல்லது ஈகோ காரணமாக தெருவின் அமைதியையும் ஊரின் பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருதரப்பின் வன்முறைகளின் காரணமாக பலமுறை காவல் துறை தலையிட்டும் இன்னும் முழு அமைதி திரும்பாமல் இருக்கிறது. அந்தப் பள்ளியில் நிலவும் சுகாதாரமான காற்றுக்காக வெளித் தெருக்களில் இருந்தெல்லாம் அங்கு தொழ வந்துகொண்டிருந்த கூட்டம் அங்கு நிலவும் திடீர் வன்முறைகள் காரணமாக குறைந்து விட்டது. கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குப் பிறகு அந்தப் பள்ளியில் ஒரு லோடு சவுக்குக் கட்டைகள் ஆங்காங்கே கிடந்தன. கற்களை வீசித் தாக்கிக்கொள்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். ஒரு வித அச்ச உணர்வு தெருவில் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனைகளை ஆக்க பூர்வமாக தீர்த்து இரு தரப்பாரையும் உண்மையில் ஒற்றுமைப் படுத்த நமது ஊரார் செய்த முயற்சிகள் யாவை? அந்தத் தெருவில் அடித்துக் கொள்கிறார்கள் நமக்கென்ன என்கிற ஒதுங்கும் மனப்பான்மைதானே மேலோங்கிவிட்டது?

இப்போது கடற்கரைத் தெருவில் கட்டப்பட்ட கபுரை துணிச்சல் மிக்க சில இளைஞர்கள் இடிக்கப் புறப்பட்டால் நாளை அந்த இளஞர்களுக்கு ஏதாவது சட்டச் சிக்கல் ஏற்பட்டால் இன்று உசுப்பி விடுவோர் துணை நிற்பார்களா என்பதே விடை தெரியாத வினா. இந்த ஊரில் தற்போது உள்ள எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்காது. கண்டனத் தீர்மானம் மட்டும் போடுவார்கள். தேனைத் தாளில் தேன் என்று எழுதி நக்கினால் இனிக்குமா?

இவற்றிற்கு என்னதான் தீர்வுகளாக இருக்க முடியும்?

ஜொஹரா அம்மாளை நோக்கி வரும் மக்களை பிரச்சாரம் செய்துதான் திருத்த வேண்டும். தப்லீக் உடைய பணிகளும், தாருத் தவ்ஹீத் உடைய பிரச்சாரமும், இன்னும் மற்ற தவ்ஹீது அமைப்புகளுடைய பிரச்சாரமும் மக்கள் மனதில் சென்று பாயும் வண்ணம் தீவிரப் படுத்தப் பட வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பின் வாராந்திரக் கூட்டம் பிலால் நகரில் வெள்ளிக் கிழமை நடப்பது போல் ஒவ்வொரு வியாழன் மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் கடல்கரைத் தெருவில் பெரிய புளிய மரத்தின் அருகில் உள்ள கொடி மர மேடைக்கு அருகிலும் விலைக்காரத் தெருவின் முச்சந்தியிலும் மாறி மாறி மார்க்க சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும்.

கபுரை இடிப்பதை விட மக்கள் மனதில் புரையோடிவிட்ட குபுரை இடிக்க பிரச்சாரம் தீவிரப் படுத்தப்பட வேண்டும். வன்முறையைக் கையில் எடுப்பதைவிட வார்த்தைகளால் மக்களை திருத்த பிரச்சாரங்கள் அதிகப்படுத்தப் படவேண்டும். இந்த கபுர் வணக்கத்துக்குக் காரணமானோரை ஊரில் உள்ள ஆலிம்கள் அவர்களின் வீடு தேடிச் சென்று விளங்கச்செய்ய வேண்டும். ஆலிம்கள், அநியாத்தை தட்டிக் கேட்க திராணியற்ற அரபிகள் போல் சுகவாசிகளாக சமூகப் பொறுப்பின்றி இருந்தால் அனாச்சாரங்கள் இன்னும் மேலோங்கும்.

ஊர் கெட்டுப்போக காரணம் செயல்படும் கெட்டவர்கள் மட்டுமல்ல செயல்படாத நல்லவர்களும்தான்.
அதிரைநிருபர் பதிப்பகம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.