தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் வேல்முருகன் (வயது32). இவர் அபுதாபியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி அளவில் வேல்முருகனின் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வேல்முருகன் மர்மமான முறையில் தூக்கில் தொங்குவதாக கூறினார். இதனால் சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை சோமசுந்தரம் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனது மகன் வேல்முருகன் கடந்த 4 ஆண்டுகளாக வளைகுடா நாடான அபுதாபியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான். கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து மனைவி மற்றும் மகள்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான். விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் அபுதாபிக்கு சென்று வேலையில் சேர்ந்து 6 மாதங்களாக வேலை செய்து வந்தான். இந்தநிலையில் எனது மகன் மர்மமான முறையில் தூக்கில் தொங்குவதாக அவனது நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன்.
வேல்முருகனுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். எனவே அரசு மூலம் முறையான விசாரணை நடத்தி எனது மகனின் உடல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்ற கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், சென்னை பொது(மறுவாழ்வுத்)துறை அரசு செயலாளர் மற்றும் அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநருக்கு கடிதம் அனுப்பினர்.
கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்த சோமசுந்தரம் கூறும்போது, எனது மகன் சாவில் மர்மம் இருக்கிறது. இருந்தாலும் அவனது இறுதிச்சடங்கு அதிராம்பட்டினத்தில் தான் நடைபெற வேண்டும். இதனால் உரிய விசாரணை நடத்தி எனது மகனின் உடலை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நன்றி மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்