Breaking News
recent

ஐரோப்பிய யூனியனைப்போல் வளைகுடா நாடுகளுக்கும் ஒருங்கிணைந்த விசா

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது 'செங்கன் விசா' என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் ஒரு விசா அனுமதி பெறுவதன்மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும். இதனால் பயணிகளுக்கு காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன், ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளுக்கு சென்றுவர இது எளிதான நடைமுறையாகவும் இருக்கிறது.

இதே போன்றதொரு பொதுவான விசா நடைமுறையை வளைகுடா நாடுகளுக்கும் கொண்டுவர வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் 2014-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படும் இந்தத் திட்டத்தால் பயணிகளின் பயண விதிமுறைகள் எளிதாக்கப்படும் என்று கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுறவு கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தப் புதிய விதிமுறை மூலம், ஒற்றை நுழைவு விசா பெறும் பயணிகளுக்கு ஒரு மாதத்திற்கான அனுமதியும், பன்மடங்கு நுழைவு விசா பெறுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று கூட்டுறவு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆயினும், இந்த விசாவினைப் பெறுவதற்கு போதுமான நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்களும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அறிவித்துள்ளது. எதிர்நோக்கப்படுகின்ற சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டபின், வரும் 2014-ம் ஆண்டின் மத்தியில் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படலாம் என்று கூட்டுறவு கவுன்சில் கருதுகின்றது.

இதனால், தற்போதைய நடைமுறையான ஒரு நாட்டிற்கான விசா அனுமதி தடை செய்யப்பட மாட்டாது என்றும் வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.