Breaking News
recent

நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி தமிமுன் அன்சாரி!



தஞ்சையில் நடந்த பொதுக்குழு மூலம் நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தமிமுன் அன்சாரி கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

சென்னை தாம்பரத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு  தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சையில் நேற்று(11-10-15 ஞாயிறு) நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மனிதநேய மக்கள் கட்சியின் சட்ட விதி 13-ன்படி தலைமை நிர்வாகக்குழு ஒப்புதலோடு பொது செயலாளர் தான் தலைமை பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் பெற்றவராவார். 

பொதுக்குழு என்ற பெயரில் சென்னை தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர், இணை பொது செயலாளர் ஆகிய 2 பேரையும் நீக்கியதாக அறிவித்ததை கண்டிப்பதோடு, தமிமுன் அன்சாரி தலைமையிலான நிர்வாகிகள் மீது முழு நம்பிக்கை வைத்து, கட்சியை வழிநடத்தி செல்லும்படி பொது செயலாளரையும், தலைமை நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்வது.

கட்சி பணியாற்ற அழைப்பு

ஜவாஹிருல்லா எப்போதும் போல் கட்சியின் நிர்வாகக்குழுவோடு இணைந்து கட்சி பணியாற்றும்படி கேட்டுக்கொள்வது.

தாத்ரி சம்பவத்தை கண்டிப்பது. மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதால் இந்த தடையை நீக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் கர்நாடக அரசை கண்டிப்பது.

மனித நேய மக்கள் கட்சி பூரண மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமைய பாடுபடும் என உறுதி ஏற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மனிதநேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,500 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் சட்டிப்படி நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்சி பிளவுபடாமல் இருக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லாவுக்கு வேண்டுகோள் விடுத்து அழைப்பு அனுப்பினோம். அதற்காக அவருக்கான இருக்கை காலியாக மேடையில் வைக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சியின் கொடி, சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். அதே போல் நாங்களும் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி, சின்னங்களை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் மூலம் அறிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.