Breaking News
recent

ரத்தாகிறது உங்கள் பாஸ்போர்ட்?

சென்னை: அகில உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று, நவம்பர் 24ஆம் தேதியோடு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் கால அவகாசம் முடிவடைகிறது.

இது குறித்து பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறுகையில், "உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது. கடந்த 1995, 1996ஆம் ஆண்டுகளில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்டு’கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அதனுடைய கால அவகாசத்தை வரும் நவம்பர் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் வழங்கிவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதற்கான பணிகளில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் போர்க்கால நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் புதுப்பிக்கும் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குள் மேல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் புதுப்பிக்கும் காலம் 20 ஆண்டுகள் இருக்கும் பாஸ்போர்ட்டுகளையும் மாற்றி 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையிலான பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் சாதாரண வகை பாஸ்போர்ட்டுகளை, பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் வழங்கிவிட்டு 64 பக்கங்கள் கொண்ட ‘ஜம்போ’ பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்து ’பாஸ்போர்ட்டு’களை பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம். காரணம் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் உடனடியாக ‘பாஸ்போர்ட்டு’கள் வழங்கப்படுகிறது. பின்னர் போலீஸ் விசாரணையில் ‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனை தவிர்க்க சாதாரண வகையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கலாம். ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 நாட்களிலும், சாதாரண வகையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களிலும் ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது. 

சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பதாயின், தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவர் மற்றும் முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்" என்று தெரிவித்தனர்.
நன்றி:விகடன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.