மும்பை: மும்பையில் கடந்த ஆண்டு வெடித்த அரசியல் கலவரம் தொடர்பான வழக்கில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிஸ் தலைவர் நாராயண் ராணே ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று மகாராஷ்டிர அரசு கோர்ட்டில் நற்சான்றிதழ் கொடுத்துள்ளது.
மும்பையில் கடந்த ஆண்டு ஜனவரியில் தொழிலாளர் பிரச்னையில் மும்பை விமானநிலையம் அருகிலுள்ள ஹோட்டல் இன்டர் கான்டினெண்டலை, எம்.பி. சஞ்சய் ராவ்த் தலைமையிலான சிவசேனா தொண்டர்கள் தாக்கினர். அதே போல நவ கால் என்ற பத்திரிகை அலுவலகத்தை நாராயண் ராணே ஆதரவாளர்கள் சூறையாடினர்.
அதே மாதம் 28-ம் தேதி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள், மும்பை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தை சூறையாடினர். இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில், விபசாரம் நடப்பதாகக் கூறி தாணே அருகிலுள்ள பியூட்டி பார்லரை நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கினர். இந்தக் கலவரங்களில் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.
இந்த 4 வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈட்டைப் பெறவேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை பொது நலன் வழக்காக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்குகளில் தொடர்புடைய கட்சித் தலைவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து மகாராஷ்டிர அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) சந்திர அய்யங்கார் உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒரு ஆவணத்தைத் தாக்கல் செய்தார்.
அதில்,
இந்த 4 வழக்குகளில் விசாரணை நடத்தியதில், கட்சித் தலைவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை என்பதும், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுமாறு அவர்கள் உத்தரவிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இந்த வழக்குகளில் தொடர்பில்லாத நிலையில் அவர்களை அரசு கைது செய்யவில்லை என்று அய்யங்கார் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்குகளில் பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, நாராயண் ராணே ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று மகாராஷ்டிர அரசே நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
![crown](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh1iQtSApMtx9WLcKyGmZbns87ILORQCeb8DpwkwBFsFfXQB-UNPVxloqsmP_kRUMOHZGourqlJMgYRVnxQ1SjWwBndZ6QVNAWZ8KThoSw7L2TWpuv2-S37iGrDXdB7tM/s151/Picture+57.jpg)
crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்