Breaking News
recent

பெண்கள் தொழில் புரிதல் - பகுதி 2

02. இஸ்லாத்தில் பெண்களின் பொருளாதாரம் சார் உரிமைகள்
இஸ்லாம் ஆண்களுக்கு பொருளாதாரம் சார் உரிமைகளை வழங்கியிருப்பது போலவே பெண்களுக்கும் அவ்வாறான உரிமைகளை வழங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் பெண்கள் தொழில் புரிவது தொடர்பான நிலைப்பாட்டை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தொழில் புரிதல், சம்பாதித்தல் என்பது பொருளாதாரத்தோடு தொடர்புபட்டது. எனவே, பொருளாதார உரிமைகள் தொடர்பான அடிப்படைகளை விளங்கிக் கொள்வதனூடாக இது பற்றிய தெளிவைப் பெற முடியும்.

வாரிசுச் சொத்து பெறும் உரிமை

இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் பங்கு வழங்குகிறது என்பதே பெண்ணுக்கு இஸ்லாம் சொத்துரிமையை கொடுத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்று. ஆண் எவ்வாறு சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கு, அவற்றிற்கு உரிமையுடையவனாக இருப்பதற்கு அனுமதி பெற்றிருக்கின்றானோ அவ்வாறே பெண்ணும் சொத்து செல்வங்களின் சொந்தக்காரியாகத் திகழ்வதற்கு அனுமதி பெறுகிறாள். எனவே, வாரிசு சொத்தில் பங்கு பெறும் பெண் தனிப்பட்ட ரீதியில் தனக்கென்று சொத்துக்கள், பொருட்களை வைத்திருப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.
ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக, சகோதரியாக சிலபோது பெரிய தாய் (பெரியம்மா), சிறிய தாய் (சாச்சி) போன்ற நிலைகளில் வாரிசுச் சொத்தில் பங்கு பெறுகிறாள்.  வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் உரிமையையும் வாரிசாகப் பெற்ற சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.
ஜாஹிலிய்யாக் காலத்தைப் பொறுத்தவரை இதற்கு நேர்மாற்றமான நிலை காணப்பட்டது. ஆண் இறந்து விட்டால் அவர் விட்டுச் சென்ற சொத்துக்களும் அவர்களுடைய பெண்மக்களும் பண்டங்களோடு பண்டங்களாகப் பகிர்ந்தளிக்கப் பட்டனர். பெண்களைப் போகப்பொருளாக மாத்திரம் பயன்படுத்திவந்த நிலையை மாற்றிய இஸ்லாம் பெண்ணுக்கு வாரிசுச் சொத்தில் எந்தளவுதூரம் பங்கு வழங்கியுள்ளது என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

'பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பங்குண்டு. அவ்வாறே பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்குண்டு (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே. (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பங்காகும்.' (அந்நிஸா: 07)

'உங்கள் பிள்ளைகளில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்று கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் இவர்களில் யார் நன்மையளிப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே, (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.' (அந்நிஸா: 11)

எனவே, வாரிசுச் சொத்தில் ஓர் அங்கமாகக் கருதப்பட்ட பெண்ணை வாரிசுச் சொத்தில் பங்கு கொள்ளும் நிலைக்கு இஸ்லாம் மாற்றியது. வாரிசுச் சொத்தில் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட, பண்டத்தோடு பண்டமாக பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டாள். பல்வேறு நிலைகளில் வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் உரிமையை அவள் பெறுகிறாள். எனவே, ஆண் சொத்துக்களை வைத்திருக்க உரிமையைப் பெற்றிருப்பது போலவே பெண்ணும் சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெறுகிறாள்.
உதாரணமாக, கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு குறைந்த பட்சம் அவரது சொத்தில் 1ஃ8 பங்கு கிடைக்கிறது. அதே போல மகள் என்ற நிலையில், சகோதரி என்ற நிலையில் மற்றும் பல நிலைகளில் அந்தப் பெண்ணுக்கு வாரிசுச் சொத்தில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் பங்கு வழங்கிய போதும் அது ஆணின் பங்குக்குச் சமமானதாக அமைவதில்லை;ளூ இந்த வகையில் வாரிசுரிமையில் பெண் புறக்கணிக்கப்படுகின்றாள் என்றொரு குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இஸ்லாமிய ஷரீஆ பெண்ணுக்கு வழங்கியுள்ள சொத்துரிமை தொடர்பான முழுமையான பார்வை இல்லாதவர்களே இக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இஸ்லாம் நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே பெண்ணை விட ஆணுக்கு சொத்துப் பங்கீட்டில் அதிகமாக வழங்குகின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் பெண் ஆணுக்குச் சமமான பங்கை அல்லது ஆணை விட அதிகமான பங்குகளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்கலாம். முப்பதிற்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் வாரிசுரிமைச் சட்டத்தில் பெண் ஆணுக்குச் சமனாக ஆணை விடக் கூடுதலாக சொத்தில் பங்கு பெறுகின்றாள் என்ற உண்மையை ஆழமாகப் பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு குடும்பத்தின் அனைத்துச் செலவினங்களும் ஆணிண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. குடும்பச் செலவுகளைப் பெண் பொறுப்பேற்றல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்ப்பதில்லை. இதனால் தான் சில சந்தர்ப்பங்களில் இஸ்லாம் ஆணுக்கு பெண்ணை விட சில பங்குகளை அதிகமாக வழங்குகின்றது.

எனவே, இஸ்லாம் வாரிசுச் சொத்தில் பல நிலைகளில் பங்குகளைப் பெறும் வாய்ப்பை வழங்கியிருப்பதானது   பொருளாதாரத் துறையில் ஒரு பெண்ணுக்கு சொத்துக்களை வைத்திருக்க முடியும் என்பதற்கு ஒரு தெளிவான ஆதாரமாகும்.

வஸிய்யத் செய்யும் -பெறும் உரிமை

ஒரு பெண்ணுக்கு தன்னுடைய சொத்துக்களை வஸிய்யத் செய்வதற்கும் மற்றொருவரால் வஸிய்யத் செய்யப்பட்ட சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது.

உதாரணமாக, குறித்த பெண்ணுக்கு தனது சொத்திலிருந்து இந்த அளவைக் கொடுங்கள் என ஒருவர் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்தப் பங்கைப் பெறுவதற்குரிய உரிமையை அந்தப் பெண் பெறுகிறாள்.
தன்னுடைய சொத்துக்களை ஒரு நிறுவனத்திற்கு அல்லது ஒரு தனிமனிதருக்கு வஸிய்யத் செய்வதற்கும் தனது உயிலாக எழுதுவதற்கும் ஒரு பெண் உரிமை பெற்றிருக்கிறாள்.

கொடுக்கல்-வாங்கல் உரிமை

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் உரிமையை (பொருட்களை வாங்கும்-விற்கும் உரிமை) ஒரு பெண் பெறுகின்றாள். அவ்வாறே தனக்குரிய சொத்தை ஓர் ஆணின் தொடர்பின்றி தான் விரும்பியவாறு வாடகைக்கு விடும் உரிமையையும் ஒரு பெண் பெறுகின்றாள்.
கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஒரு பெரும் தொழிலதிபராகத் திகழ்ந்ததாக இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. பெரும் சொத்து செல்வங்களுக்குச் சொந்தக்காரியாக அவர்கள் இருந்தார்கள். நுபுவ்வத்திற்கு முன்பு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூட கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வியாபாரத்தை அவர்களது சார்பில் செய்யக் கூடிய அளவுக்கு அவர்கள் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களாக இருந்தார்கள்.
இஸ்லாத்திற்குப் பிறகும் அன்னாரது பொருளாதாரம் வளமாக அமைந்தது. அவர்களுடைய சொத்து செல்வங்கள் நபியவர்களின் தஃவாவிற்கு, இலட்சியப் பணிக்கு மிகப் பெரும் துணையாக அமைந்தன. கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய இலட்சியப் பணிக்கு துணை நின்றது மாத்திரமல்ல, நபியவர்கள் கொண்டு வந்த சத்திய இஸ்லாத்திற்காக தனது சொத்துக்களை அர்ப்பணித்தார்கள்.

வக்பு செய்யும்-பெறும் உரிமை

ஒரு பெண், ஆணைப் போலவே தன்னிடமிருக்கின்ற சொத்துக்களை வக்பு செய்வதற்கு, அல்லாஹ்வின் பாதையில் வழங்குவதற்கு உரிமை பெறுகின்றாள். தனது  உடைமையை ஒரு மஸ்ஜித் நிர்மாணத்திற்கு, மத்ரஸாவை நிறுவுவதற்கு, ஒரு தஃவா நிலையத்தை அமைப்பதற்கு, ஒரு பாடசாலைக்கு, ஒரு பல்கலைக்கழகத்திற்கு, ஒரு வைத்தியசாலைக்கு, ஒரு பொதுப் பணிக்கு, ஒரு சமூகப் பணிக்கு அல்லாஹ்வின் பெயரில் வக்பு செய்வதற்கு ஓர் ஆணுக்கு உரிமையுள்ளது போலவே ஒரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது.

ஸதகா செய்யும் உரிமை

தன்னுடைய சொத்துக்களை ஸதகா செய்வதற்கும் தன்னிடமிருக்கின்ற அசையும்-அசையா சொத்துக்களை தர்மம் செய்வதற்கும் பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கைத்தொழில் செய்து, தான் தயாரித்த பொருட்களை விற்று, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை அதிகம் தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். தான் உழைத்ததை அதிகமதிகம் அடுத்தவர்களுக்குக் கொடுத்துதவியதையும் அவர்களது வரலாற்றில் காணலாம்.

இரவல் வாங்கும்-வழங்கும் உரிமை

தன்னிடமிருக்கின்ற பொருட்களை இரவல் வழங்கவும் பிறரிடமிருந்து பொருட்களை இரவலாகப் பெறவும் ஒரு பெண் உரிமை பெறுகின்றாள்.

பிணை நிற்கும் உரிமை

கொடுக்கல்வாங்கலில் ஒருவருடைய சார்பில் பிணை நிற்பதற்கு அல்லது பொறுப்பு நிற்பதற்கு ஓர் ஆணைப் போலவே ஒரு பெண்ணுக்கும் உரிமை உண்டு.

அடகு வைக்கும் உரிமை

ஷரீஆ வரையறைகளை மீறாமல் பொருட்களை அடகு வைப்பதற்கான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா வகையான தொழில்சார், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களிலும் ஆண்களைப் போலவே சுதந்திரமாக ஈடுபடக்கூடிய முழுமையான உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.

வாரிசுச் சொத்து, வஸிய்யத், வாங்கும்விற்கும் உரிமை, வாடகைக்கு  விடுதல், இரவல் வழங்குதல், வக்பு செய்தல், தர்மம் செய்தல், பிணை நிற்றல், அடகு வைத்தல்... என இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பொருளாதார உரிமைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். மட்டுமன்றி, பெண்களுக்கு நேரடியாகவே எல்லா வகையான சொத்துக்களையும் வைத்துக் கொள்வதற்கு பூரணமான உரிமை இருப்பதாக அல்குர்ஆன் கூறுகிறது.

'ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குச் சொந்தமானவை ஆகும். அவ்வாறே பெண்கள் உழைத்தவை பெண்களுக்குச் சொந்தமானவையாகும்.' (அந்நிஸா: 32)
ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்கு சொந்தமானதாகவும் அவற்றின் உரிமையும் உடைமையும் அவர்களுக்குரியதாகவும் இருப்பது போல பெண்கள் உழைத்தவையும் மற்றும் அவர்களுக்குக் கிடைத்த பொருட்கள், சொத்துக்கள் என்பனவும் அவர்களுக்கு உரியவையாகும் என அல்குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது.
(தொடரும்..இன்ஷா அல்லாஹ் )
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.